இஷான் கிஷனிடம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி பேச வேண்டும்- கங்குலி


இஷான் கிஷனிடம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி பேச வேண்டும்- கங்குலி
x

ஐ.பி.எல். தொடரால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிவதில்லை என்று யார் சொன்னாலும் அந்த காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் 2023 - 24 மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிஷன் ஆகிய இரண்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய அணியில் முக்கிய வீரராக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒப்பந்த பட்டியலில் 3 கோடிகளை சம்பளமாக பெறும் 'பி' பிரிவில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அதேபோல ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த இஷான் கிஷன் கடந்த ஒப்பந்த பட்டியலில் ஒரு கோடியை சம்பளமாக பெறும் 'சி' பிரிவில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் தற்போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடத் தவறியதால் அவர்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது.

இந்நிலையில் இஷான் கிஷன் போன்ற திறமையான வீரரிடம் ஏன் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதை பற்றி பி.சி.சி.ஐ. தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் தேர்வுக் குழுவினர் பேச வேண்டும் என்று சவுரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடரால் ரஞ்சிக் கோப்பையில் விளையாட முடிவதில்லை என்று யார் சொன்னாலும் அந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் கங்குலி இது குறித்து பேசியது பின்வருமாறு;-

"இஷான் கிஷன் போன்ற வீரரிடம் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி மற்றும் தேர்வுக் குழுவினர் பேச வேண்டும். ஏனெனில் ஏற்கனவே அவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் உள்ளூர் வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடியுள்ளார். எனவே இப்போது விளையாடாததால் மட்டும் அவர் மோசமான வீரராக மாறி விட்டாரா என்று கேட்டால் கிடையாது.

ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணிக்காக விளையாடும் இஷாந்த் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் அனைத்து உள்ளூர் தொடர்களிலும் விளையாடுகின்றனர். எனவே நமது வீரர்கள் டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் தாராளமாக விளையாடலாம்.

உள்ளூர் கிரிக்கெட்டுடன் உங்களுடைய ஐ.பி.எல். கெரியரையும் நீங்கள் தொடரலாம். ஏனெனில் உள்ளூர் போட்டிகள் ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பாகவே முடிந்து விடுகின்றன. எனவே அதில் விளையாடுவதற்கு எந்த பிரச்சினையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.


Next Story