'பாக்சிங் டே' டெஸ்ட் நாளை தொடக்கம்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்


பாக்சிங் டே டெஸ்ட் நாளை தொடக்கம்: ஆஸ்திரேலியா-பாகிஸ்தான், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்
x

‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.

மெல்போர்ன்,

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 360 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கும் இந்த போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. 'பாக்சிங் டே' என்றால் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நாள் என்று அர்த்தம் கிடையாது. இந்த பெயருக்கு சில சுவாரஸ்யமான வரலாறு உண்டு.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, கனடா போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26-ந்தேதி அன்று அந்த பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு வழங்குவார்கள். இப்படியாக பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் சீசனில் குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது அவர்களது முதலாளிகள் சிறப்பு பரிசாக கிறிஸ்துமஸ் பாக்ஸ் வழங்கும் பழக்கம் இருந்தது. இதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இன்னொரு காரணமும் உண்டு. முந்தைய காலத்தில் காற்றால் இயக்கப்படும் கப்பல்களில் மேற்கொள்ளப்படும் பயணம் ஆபத்து இன்றி பாதுகாப்பாக அமைய வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பணம் அடங்கிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். பயணம் நிறைவு பெற்றதும் அந்த பெட்டி பாதிரியாரிடம் ஒப்படைக்கப்படும். கிறிஸ்துமஸ் அன்று அது திறக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். இதுவும் 'பாக்சிங் டே' பெயருக்கு ஒரு அச்சாரமாக சொல்லப்படுகிறது.

1950-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. சில காரணங்களால் சில ஆண்டுகள் குறிப்பிட்ட நாளில் அந்த போட்டியை நடத்த முடியாமல் போய் இருக்கிறது. ஆனால் 1980-ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் 'பாக்சிங் டே' போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலியா பெற்று இருக்கிறது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் 'பாக்சிங் டே' அன்று ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுடன் விளையாடிக்கொண்டு இருக்கும். அந்த வகையில் இந்த முறை அந்த பாரம்பரிய நாளில் பாகிஸ்தான் மல்லுக்கட்டுகிறது.

பாகிஸ்தான் அணி மெல்போர்னில் இதுவரை 10 டெஸ்டில் விளையாடி 2-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. 2 டெஸ்ட் டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக ஆடிய 15 டெஸ்டுகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருக்கும் பாகிஸ்தான் அணி நீண்ட சோகத்துக்கு முடிவு கட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை (பிற்பகல் 1.30 மணி) தொடங்குகிறது. இதுவும் 'பாக்சிங் டே' என்றே அழைக்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்காவை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மோதலை தவிர்த்து மற்றபடி 'பாக்சிங் டே' அன்று தங்கள் நாட்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. 'பாக்சிங் டே' போட்டி நடக்கும் செஞ்சூரியன் மைதானத்தில் 3 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய அணி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story