'கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை அற்புதமாக வழிநடத்துகிறார்' - ரஹானே பேட்டி


கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை அற்புதமாக வழிநடத்துகிறார் - ரஹானே பேட்டி
x

ஐ.பி.எல். மூலம் பெற்ற உத்வேகம் டெஸ்ட் இறுதிப்போட்டியிலும் தொடருவதை எதிர்நோக்கி இருப்பதாக இந்திய வீரர் ரஹானே கூறினார்.

லண்டன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 7-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று என்பதால் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணியில் ஒன்றரை ஆண்டுக்கு பிறகு மறுபிரவேசம் செய்துள்ள 82 டெஸ்டில் விளையாடிய அனுபவசாலியான 34 வயதான அஜிங்யா ரஹானே நேற்று கிரிக்கெட் வாரிய இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

"இந்திய அணிக்கு 18-19 மாதங்களுக்கு பிறகு திரும்பி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையிலேயே இது எனக்கு சிறப்பு வாய்ந்த தருணம் தான். நடந்தவை எதுவாகினும் நல்லதோ, கெட்டதோ அது பற்றி சிந்திக்க விரும்பவில்லை. மீண்டும் புதிதாக புத்துணர்ச்சியுடன் பயணத்தை தொடங்குகிறேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக (2 அரைசதம் உள்பட 326 ரன்) உற்சாகமாக விளையாடினேன். தொடர் முழுவதும் நன்றாக பேட்டிங் செய்தேன். ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கு முன்பு கூட முதல்தர கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி இருந்தேன். எந்த வடிவிலான கிரிக்கெட் என்றாலும் அது பற்றி அதிகமாக யோசிக்காமல், தற்போதைய பேட்டிங் பார்மை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் கொண்டு செல்ல விரும்புகிறேன்.

இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். எனது குடும்பத்தினர், குறிப்பிட்ட நண்பர்கள் எனக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருந்தனர். அப்போது குடும்பத்தினரிடம் இன்னும் இந்திய அணிக்காக விளையாடுவது தான் கனவு என்று சொன்னேன். உடல்தகுதியை மேம்படுத்துவதற்காக கடினமாக உழைத்தேன். சரியான திட்டமிடலுடன் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினேன். ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்குரிய சீசன் சிறப்பாக அமைந்தது. உள்ளூர் போட்டி என்றாலும், ஒவ்வொரு தருணத்தையும் உற்சாகமாக அனுபவித்தேன். ஒவ்வொரு தனிநபரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இது எல்லாம் நான் மீண்டும் அணிக்கு திரும்ப உதவியது.

கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியை அற்புதமாக வழிநடத்துகிறார். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் உண்மையிலேயே அணியை அருமையாக கையாளுகிறார். இதனால் அணியின் சூழல் இப்போது நன்றாக இருக்கிறது. வீரர்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருப்பதை பார்க்க முடிகிறது.

இங்கிலாந்து மண்ணில் சாதிப்பதற்கு மனதளவில் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம். களத்தில் ஒவ்வொரு பகுதியையும் உன்னிப்பாக கணித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இங்கிலாந்தில் ஆடுகளத்தை மட்டும் பார்க்க கூடாது. சீதோஷ்ணநிலை எப்படி மாறுகிறது என்பதையும் கவனிக்கவேண்டும். இங்கிலாந்து மண்ணில் 70 ரன்னில் பேட்டிங் செய்து கொண்டிருந்தாலும் கூட சவுகரியமான நிலையில் இருப்பதாக நினைக்க முடியாது."

இவ்வாறு ரஹானே கூறினார்.


Next Story