சென்னை-லக்னோ இடையிலான ஆட்டம் மழையால் ரத்து...!


சென்னை-லக்னோ இடையிலான ஆட்டம் மழையால் ரத்து...!
x

Image Courtesy: @IPL

சென்னை-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

16வது ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை நடைபெற்று வரும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டுவதில் மழை காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் மழை நின்ற பின்னர் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

லக்னோ அணியில் காயம் காரணமாக ராகுல் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக க்ருணால் பாண்ட்யா லக்னோ அணியை வழிநடத்துகிறார்.

லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் மேயர்ஸ் 14 ரன், மனன் வோரா 10 ரன், அடுத்து களம் இறங்கிய கரன் சர்மா 9 ரன், கேப்டன் பாண்ட்யா 0 ரன், அதிரடி ஆட்டக்காரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 ரன் எடுத்த நிலையில் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

இதன் காரணமாக லக்னோ அணி 44 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து அதிரடி ஆட்டக்காரர் நிகோலஸ் பூரனும், ஆயுஷ் பதோனியும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை ரன் சேகரிப்பில் துரிதமாக செயல்பட்டது.

இந்த இணை 59 ரன்கள் சேர்த்த நிலையில் பூரன் 20 ரன்னுக்கு அவுட் ஆனார். இதையடுத்து கிருஷ்ணப்பா கவுதம் களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய பதோனி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.


Next Story