உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்காளதேசத்திற்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: வங்காளதேசத்திற்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி
x

Image Credits : PTI

தினத்தந்தி 6 Nov 2023 12:44 PM GMT (Updated: 6 Nov 2023 12:48 PM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேச அணிகள் மோதிவருகின்றன.

புது டெல்லி,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. இந்த தொடரில் இன்றைய 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்காளதேசம் மோதி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குசல் பரேரா களமிறங்கினர். பரேரா 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த மெண்டிஸ் 19 ரன்னில் அவுட் ஆனார். நிதானமாக ஆடிய நிசங்கா 41 ரன்னில் அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவிக்ரமா 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷகீப் பந்துவீச்சில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார். மேத்யூஸ் களத்திற்குள் நுழைந்தபோது அவரது ஹெல்மெட்டில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதனால், அவர் 2 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் செய்யாமல் களத்திலேயே நின்றுள்ளார். எனவே அவர் டைம் அவுட் முறையில் அவுட் ஆனார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ்.

அதன் பிறகு களமிறங்கிய அசலாங்கா தனது பொறுப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார். அவர் 105 பந்துகளில் 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தனன்ஜெயா 34 ரன்களிலும், தீக்ஷனா 22 ரன்களிலும், துஷ்மந்தா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ரஜிதா, மதுஷங்கா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Next Story