டெல்லி தோல்வி எதிரொலி: 4 ஆம் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி


டெல்லி தோல்வி எதிரொலி: 4 ஆம் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி
x
தினத்தந்தி 21 May 2022 8:47 PM GMT (Updated: 21 May 2022 8:53 PM GMT)

ஐபிஎல் லில் நேற்றைய போட்டியில் டெல்லி அணி தோல்வியை தழுவியதால், பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மும்பை,

நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆப் சுற்று எனப்படும் அடுத்த சுற்றுக்கு ஏற்கெனவே குஜராத், ராஜஸ்தான், லக்னோ ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

இந்த நிலையில், கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவதற்கு டெல்லி அணிக்கும், பெங்களூரு அணிக்கும் போட்டி நிலவியது. இதனை தீர்மானிக்கும் போட்டியாக நேற்றைய போட்டி அமைந்தது.

குறிப்பாக பெங்களூரு அணி 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் பின் தங்கி இருந்தது. இதனால், 14 புள்ளிகளுடன் இருந்த டெல்லி அணி நல்ல ரன் ரேட்டுடன் இருந்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்துவிடும். அதே வேளை டெல்லி அணி தேற்றால், பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் சூழலில் போட்டியானது நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற போட்டியை பெங்களூரு அணியினரும் ஆர்வமுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணி டெல்லியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியை பெற்றது. அதே நேரம் டெல்லி அணி தோற்றதால் தொடரை விட்டு வெளியேறியது. இதன் மூலம் கடைசி அணியாக பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.


Next Story