முதல்தர கிரிக்கெட்; 147 பந்துகளில் முச்சதம்...சாதனை படைத்த இந்திய வீரர்


முதல்தர கிரிக்கெட்;  147 பந்துகளில் முச்சதம்...சாதனை படைத்த இந்திய வீரர்
x

கோப்புப்படம்

முதல்தர கிரிக்கெட்டில் தன்மய் அகர்வால் 147 பந்துகளில் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐதராபாத்,

ரஞ்சி கிரிக்கெட்டில் பிளேட் பிரிவில் ஐதராபாத்- அருணாசலபிரதேச அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (4 நாள் ) ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த அருணாபிரதேசம் 39.4 ஓவர்களில் 172 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஐதராபாத் அணியில் தன்மய் அகர்வால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரன்மழை பொழிந்த அவர் 147 பந்துகளில் முச்சதத்தை எட்டினார். முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக முச்சதம் இது தான். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு லண்டனில் நடந்த முதல்தர கிரிக்கெட்டில் மார்கோ மரைஸ் என்ற வீரர் 191 பந்துகளில் முச்சதம் அடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

தன்மய் அகர்வாலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் ராகுல் சிங் 185 ரன்களில் கேட்ச் ஆனார். ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 48 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 529 ரன்கள் குவித்துள்ளது.

தன்மய் அகர்வால் 323 ரன்களுடனும் (160 பந்து, 33 பவுண்டரி, 21 சிக்சர்), அபிரதி ரெட்டி 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இரு அணியும் சேர்ந்து மொத்தம் 701 ரன்கள் திரட்டியுள்ளது. ஒரே நாளில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.


Next Story