அந்த விஷயத்தில் மற்ற இந்திய வீரர்கள் யாரும் ஷிவம் துபேவை நெருங்க முடியாது -இந்திய முன்னாள் வீரர்


அந்த விஷயத்தில் மற்ற இந்திய வீரர்கள் யாரும் ஷிவம் துபேவை நெருங்க முடியாது -இந்திய  முன்னாள் வீரர்
x

image courtesy: twitter/ @ChennaiIPL

தினத்தந்தி 6 April 2024 10:43 AM GMT (Updated: 6 April 2024 10:45 AM GMT)

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம்பெற வேண்டும் என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்டிங் தரப்பில் ஷிவம் துபே மட்டுமே அதிரடியாக விளையாடினார். அதனால்தான் சென்னை அணியால் கவுரமான இலக்கை (166 ரன்கள்) நிர்ணயம் செய்ய முடிந்தது.

இல்லையெனில் சென்னை அணியால் 140 ரன்களை கூட நெருங்க முடிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். இந்த ஆட்டம் மட்டுமின்றி கடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்தே ஷிவம் துபே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் தற்சமயத்தில் ஸ்பின்னர்களை வெளுத்து வாங்குவதில் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே துபேவை நெருங்க முடியாது என்று புகழாரம் சூட்டியுள்ளார். எனவே சிவம் துபே 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"அவர் மீது நான் நெருக்கமான கண்ணை வைத்திருக்கிறேன். அவரை நான் உலகக் கோப்பை அணியில் எடுத்து செல்வேன். ஏனெனில் அவர் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்குகிறார். அவர் களத்திற்கு சென்று செட்டிலாக முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த வருடத்தை போலவே இந்த ஐ.பி.எல். தொடரிலும் மணிகட்டு மற்றும் விரல் ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் அசத்துவதை நாம் பார்க்கிறோம்.

அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் மோசமானவர் கிடையாது என்பதையும் நினைவில் வையுங்கள். அவர் மும்பையில் இருந்து வந்தவர் என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர். மும்பையில் எப்போதும் நல்ல பவுன்ஸ் இருக்கும். மிடில் ஓவர்களில் இவரைப்போல் அசத்தக்கூடிய வீரர்கள் யார்? எனவே தற்சமயத்தில் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்குவதில் சிவம் துபேவின் திறமையை நெருங்கும் அளவுக்கு மற்ற இந்திய வீரர்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.


Next Story