லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்...!


லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸி.முன்னாள் வீரர் நியமனம்...!
x
தினத்தந்தி 15 July 2023 3:26 AM GMT (Updated: 15 July 2023 3:26 AM GMT)

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது.

மறுபுறம் கோப்பையை வெல்ல போராடிய எஞ்சிய அணிகளுக்கு மத்தியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் தங்களுடைய முதல் சீசனை போலவே இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

குறிப்பாக கேப்டன் கேஎல் ராகுல் பாதியிலேயே விலகிய போதும் அந்த அணி புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்து சிறப்பாகவே செயல்பட்டது. இருப்பினும் சேப்பாக்கத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பையிடம் தோல்வியை சந்தித்த லக்னோ மீண்டும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

முன்னதாக கடந்த வருடம் தோற்றுவிக்கப்பட்ட அந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட நிலையில் தலைமை பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் ஆன்ட்டி பிளவர் செயல்பட்டு வந்தார்.

இருப்பினும் அவருடைய 2 வருட பதவி காலம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த வருடத்துடன் நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த சீசனில் லக்னோவுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பதவிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரின் ஆலோசனைப்படி புதிய பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கரை அணி நிர்வாகம் அணுகியது.

அவரும் சம்மதம் தெரிவிக்கவே, லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளராக லாங்கர் நேற்று நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.




Next Story