படிதாரை நீக்கிவிட்டு அவரை இறக்குங்கள்...மேலும் - பெங்களூரு வெற்றி பெற இந்திய முன்னாள் வீரர் ஆலோசனை


படிதாரை நீக்கிவிட்டு அவரை இறக்குங்கள்...மேலும் - பெங்களூரு வெற்றி பெற இந்திய முன்னாள் வீரர் ஆலோசனை
x

image courtesy:AFP

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 2 தோல்விகளையும் ஒரு வெற்றியையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது.

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய முதல் 3 போட்டிகளில் 2 தோல்விகளையும் ஒரு வெற்றியையும் மட்டுமே பதிவு செய்து தடுமாறி வருகிறது.

குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த 3வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு போராடி 182 ரன்கள் அடித்தது. ஆனால் அதை சேசிங் செய்த கொல்கத்தா அசால்டாக 16.5 ஓவரிலேயே இலக்கை கடந்து வெற்றி கண்டது. அந்த போட்டியில் பெங்களூரு பேட்ஸ்மேன்கள் போராடி எடுத்த ரன்களை வழக்கம்போல பவுலர்கள் பந்து வீச்சில் வள்ளலாக வாரி வழங்கி வெற்றியை தாரை வார்த்தனர். -அதனால் இந்த பவுலிங்கை வைத்துக் கொண்டு பெங்களூரு முதல் கோப்பையை வெல்ல முடியாது என்று நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பெங்களூரு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமெனில் முதலில் தடுமாற்றமாக பேட்டிங் செய்து வரும் ரஜத் படிதாரை நீக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்தின் ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸை அணிக்குள் கொண்டு வந்து நேரடியாக விராட் கோலியுடன் ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்றும் ஸ்ரீகாந்த் அதிரடியான ஆலோசனை கொடுத்துள்ளார்.

அத்துடன் பந்து வீச்சில் வள்ளலாக செயல்படும் அல்சாரி ஜோசப்பை நீக்கி விட்டு சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அசத்திய இந்தியாவின் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"வில் ஜேக்ஸ் சிறப்பான ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டர். அவரிடமிருந்து நம்மால் 2 ஓவர்களை பெற முடியும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை நான் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்தால் விராட் கோலியுடன் ஓப்பனிங்கில் வில் ஜேக்ஸை களமிறக்குவேன். 3-வது இடத்தில் டு பிளேஸிஸ், 4வது இடத்தில் கிரீன், 5வது இடத்தில் கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரை விளையாட வைப்பேன்.

மேலும் நீங்கள் அல்சாரி ஜோசப், ரஜத் படிதார் ஆகியோரை நீக்கி விட்டு இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி செய்தால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமநிலை ஏற்படும். ஆனால் கடந்த போட்டியில் ஆர்.சி.பி. பவுலர்கள் ஒரு பவுன்சர் பந்தை கூட வீசாதது எனக்கு ஆச்சரியமாக அமைந்தது" என்று கூறினார்.


Next Story