ரூ. 100 , 200 கூட இல்லாமல் தவித்தேன் ...கிரிக்கெட்டை விட்டுவிடலாம் என்று நினைத்தேன் - முகமது சிராஜ்


ரூ. 100 , 200 கூட இல்லாமல் தவித்தேன் ...கிரிக்கெட்டை விட்டுவிடலாம் என்று நினைத்தேன் - முகமது சிராஜ்
x

image courtesy: PTI

தினத்தந்தி 13 March 2024 10:15 AM GMT (Updated: 13 March 2024 10:29 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் 30-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜ், ஆரம்ப காலங்களில் உள்ளூரில் விளையாடிய அவர் பின்னர் ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியில் விளையாடினார். அதில் ரன்களை வாரி வழங்கி தோல்விகளுக்கு காரணமாக அமைந்ததால் உங்கள் அப்பாவைப்போல் ஆட்டோ ஓட்டச் செல்லுங்கள் என்ற விமர்சனங்களை சிராஜ் சந்தித்தார்.

இருப்பினும் அப்போதைய பெங்களூரு கேப்டன் விராட் கோலியின் ஆதரவுடன் தொடர்ந்து போராடிய அவர் 2019 மற்றும் 2020 ஐ.பி.எல் சீசன்களில் சிறப்பாக செயல்பட்டார். அதைத் தொடர்ந்து இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட துவங்கிய அவர் 2020-ல் தன்னுடைய தந்தை இறப்புக்கு கூட செல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வெற்றியில் பங்காற்றியதை மறக்க முடியாது.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய அவர் கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 பவுலராக முன்னேறி தற்போது இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். சிராஜ், தனது 30-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

இந்நிலையில் 2019 - 2020 காலங்களில் ரூ. 100 , 200கூட இல்லாமல் மிகவும் கடினமான சூழ்நிலைகளை சந்தித்ததால் கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்று நினைத்ததாக முகமது சிராஜ் கூறியுள்ளார். சிராஜின் 30-வது பிறந்தநாளில் ஆரம்பக் காலங்களில் சந்தித்த கடினமான தருணங்கள் பற்றி பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு;-

"2019 - 2020 காலங்களில் இதுவே கடைசி வருடம். இனிமேல் கிரிக்கெட்டை விட்டு விடலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் சமையல் வேலைக்காக செல்வேன். ஆனால் என்னுடைய குடும்பத்தினர் படிக்குமாறு சொல்வார்கள். வாடகை வீட்டில் நாங்கள் இருந்தாலும் எனக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் இருந்தது. எங்கள் வீட்டில் அப்பா மட்டுமே பணம் சம்பாதிப்பவராக இருந்தார்.

எனவே 100 - 200 ரூபாய் எனக்கு கிடைத்தால் கூட அதை வைத்து நான் மகிழ்ச்சியடைவேன். அதில் 100 - 150 ரூபாய்களை வீட்டில் கொடுத்து விட்டு 50 ரூபாயை நான் வைத்துக்கொள்வேன். அப்படி நியாயமான போராட்டங்களுக்கு பின்னரே நான் இங்கே வந்துள்ளேன். அந்த வகையில் நீங்கள் கடினமாக உழைக்கும்போது அது கண்டிப்பாக வீண் போகாது. இன்று அல்லது நாளை அல்லது சில வருடங்கள் கடந்தாலும் உங்களுடைய கடினமான உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் ஒருநாள் கிடைக்கும்" என்று கூறினார்.


Next Story