இந்த இரண்டு பேருடன் ஹோட்டல் அறையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் - ரோகித் சர்மா


இந்த இரண்டு பேருடன் ஹோட்டல் அறையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் - ரோகித் சர்மா
x

Image Courtesy: AFP

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்ட்யா செயல்பட்டு வருகிறார். இதுவரை மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா சாதாரண வீரராக ஆடி வருகிறார். நடப்பு தொடரில் மும்பை அணி ஆடிய 4 ஆட்டங்களில் 1 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்ட இந்த கேப்டன்சி மாற்றத்தினால் ரோகித் சர்மா மற்றும் பாண்டியா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாகவும் அதனால் அணியில் ஒற்றுமை இல்லாத சூழல் இருந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு வீரர்களுடன் ஹோட்டல் அறையை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

இப்போது எல்லாம் அனைவருக்கும் தனித்தனியாக அறை கிடைக்கிறது. ஒருவேளை எனக்கு ஒரு தனி அறையை மற்ற வீரர்களுடன் பகிர வாய்ப்பு கிடைத்தால் இரண்டு வீரர்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டேன். அவர்கள் வேறு யாருமில்லை ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர்தான். அவர்கள் மிகவும் குளறுபடியானவர்கள் என்று கலகலப்பாக பேசினார்.

தவான் மற்றும் பண்ட் ஆகிய இருவரும் பயிற்சிக்கு பிறகு தங்களது ஆடைகளை படுக்கையிலேயே தூக்கி எறிந்து விடுவார்கள். அதுமட்டும் இன்றி மதியம் ஒரு மணி வரை தூங்குவார்கள். எனவே அவர்களது அறை எப்போதும் கலைந்தே தான் இருக்கும் அதனால்தான் அவர்களுடன் நான் அறையை பகிர மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story