அவரை நான் இடது கை தோனி என்று அழைப்பேன் - இளம் வீரரை புகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்


அவரை நான் இடது கை தோனி என்று அழைப்பேன் - இளம் வீரரை புகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின்
x

கோப்புப்படம்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

மேலும் இளம் வீரர்களான ஷிவம் துபே, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோரும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். குறிப்பாக 3வது டி20 போட்டியில் இந்திய அணி தடுமாறியபோது ரிங்கு சிங் கேப்டன் ரோகித்துடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.

இந்நிலையில் தோனி இடது கை பேட்ஸ்மேனாக விளையாடினால் எப்படி இருக்குமோ அதேபோல ரிங்கு சிங் அசத்துவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை பாராட்டி உள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அஸ்வின் கூறியதாவது,

அவரை நான் இடது கை தோனி என்றழைப்பேன். இப்போதே அவரை நான் தோனியுடன் ஒப்பிடவில்லை. ஏனெனில் தோனி மிகப்பெரியவர். ஆனால் இங்கே நான் ரிங்கு சிங் காட்டும் பொறுமையைப் பற்றி பேசுகிறேன். உத்தரபிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் குவித்த அவர் தற்போது இந்திய அணிக்குள் வந்துள்ளார்.

கொல்கத்தா அணியில் பல வருடங்களாக இருந்த அவர் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வலைப்பயிற்சியில் மற்ற பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்துகளை ஓடிப்போய் எடுத்து பவுலர்களிடம் கொடுப்பார் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

அந்த வகையில் கொல்கத்தா அணியில் நீண்ட காலம் இருந்த அவர் உத்தரபிரதேச அணிக்காக கடினமான உழைப்பை போட்டார். தற்போது இந்திய அணியை கடினமான சூழ்நிலைகளில் வெற்றிகரமாக பினிஷிங் செய்து மீட்டெடுக்க முடியும் என்பதை அவர் காண்பிக்கிறார்.

அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவருடைய அமைதி குலைவதில்லை. குறிப்பாக போட்டியின் கடைசி நேரத்தில் அமைதியாக செயல்படுவது அவருக்கு கிடைத்த போனஸ். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story