டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி திருப்பூர் அபார வெற்றி


டிஎன்பிஎல்: மதுரையை வீழ்த்தி திருப்பூர் அபார வெற்றி
x

மதுரை பாந்தர்ஸ் அணியை 53 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

சேலம்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. நெல்லை, திண்டுக்கல், கோவை ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளன. 2 நாள் ஓய்வை தொடர்ந்து கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் நடக்கிறது.

இந்த நிலையில் டிஎன்பிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. திருப்பூர் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரவிந்த் 19 ரன்களும் ஶ்ரீகாந்த் அனிருதா 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ராஜ்குமார் 10 ரன்களும், பிரான்சிஸ் ரோகின்ஸ் 17 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய மான் பாஃனா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் அருண் கார்த்திக், விக்னேஷ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விக்னேஷ் ரன் எதுவும் எடுக்காமல் (0 ரன்) வெளியேறினார். அருண் 12 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் திருப்பூர் வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியில் மதுரை அணி 17.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றிபெற்றது.

சிறப்பாக பந்து வீசிய திருப்பூர் அணியின் அஸ்வின் கிறிஸ்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


Next Story