மழை காரணமாக கைவிடப்பட்ட 5-வது டி20 : கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள்


மழை காரணமாக கைவிடப்பட்ட 5-வது டி20 : கோப்பையை பகிர்ந்து கொண்ட இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள்
x

Image Courtesy : BCCI 

தினத்தந்தி 19 Jun 2022 4:36 PM GMT (Updated: 19 Jun 2022 4:40 PM GMT)

மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த காரணமாக போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய இருந்தது. இந்த நிலையில் இந்த போட்டி தொடங்குவதில் மழை காரணமாக முதலில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 19 ஓவர்களாக போட்டி குறைபட்டு 7.50 மணிக்கு தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் முதல் ஓவரில் 2 சிக்சர்களை அடித்தார். பின்னர் நிகிடி பந்துவீச்சில் 15 ரன்களில் அவுட்டானார்.

அவரை தொடர்ந்து ருதுராஜ் 10 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 3.3 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் மீண்டும் போட்டி தடைப்பட்டுள்ளது. களத்தில் ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் இருந்தனர்.

மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்த காரணமாக போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்கின்றனர். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்றைய போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக இருந்தது. இந்த நிலையில் போட்டி கைவிடப்பட்டதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story