பெண்கள் ஆசிய கோப்பை: 8-வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி


பெண்கள் ஆசிய கோப்பை: 8-வது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி
x

அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன

சில்ஹெட்,

பெண்கள் ஆசிய கோப்பை: 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) வங்காளதேசத்தின் சில்ஹெட் நகரில் நடந்து வருகிறது. 7 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 பு]ள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த தொடரின் அரைஇறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. முதலாவது அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி அணியான தாய்லாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் அடித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 28 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் 36 ரன்கள் அடித்தார். 149 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 8-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதை தொடந்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இலங்கையை வீழ்த்தி 7-வது முறையாக கோப்பையை இந்திய அணி முத்தமிடுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Next Story