முதல் டி20 போட்டி: சூர்யகுமார்- ராகுல் ஜோடி அதிரடி- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி


முதல் டி20 போட்டி: சூர்யகுமார்- ராகுல் ஜோடி அதிரடி- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
x
தினத்தந்தி 28 Sep 2022 4:52 PM GMT (Updated: 28 Sep 2022 4:58 PM GMT)

தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

திருவனந்தபுரம்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக டி காக்-கேப்டன் பவுமா களமிறங்கினர்.

தீபக் சஹார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் பவுமா (டக் அவுட்) ஆட்டமிழந்தார். அதன் பிறகு 2-வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தார். அந்த ஓவரில் டி காக் (1 ரன்,) ரிலீ ரோஸோ (டக் அவுட்), மில்லர் (டக் அவுட்) ஆகியோரை வெளியேற்றி அர்ஷ்தீப் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

இதனால் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தொடக்கத்தில் தடுமாறியது. ஒருமுனையில் நிலைத்து நின்று விளையாடி வந்த ஐடன் மார்க்ரம். ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் பின்வரிசையில் பார்னெல்- கேசவ் மகாராஜ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இருப்பினும் இந்திய அணியின் அசத்தல் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பார்னெல் 24 ரன்களிலும் கேசவ் மகாராஜ் 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியின் தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்களையும், தீபக் சஹார் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல்- கேப்டன் ரோகித் சர்மா களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரை வீசிய ரபாடா ரோகித் சர்மா (டக் அவுட்) விக்கெட்டை கைப்பற்றினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் லோகேஷ் ராகுலுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். எளிதான இலக்காக இருந்தாலும் தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்தனர். இருப்பினும் இந்த சவாலை ராகுல்- சூர்யகுமார் ஜோடி சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். இதனால் இந்த ஜோடி 50 ரன்கள் பாட்னர்ஷிப்பை வெற்றிகரமாக கடந்தனர்.

அதன் பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் சூர்ய குமார் யாதவ் அரைசதம் அடித்தார். இறுதியில் சிக்சருடன் போட்டியை முடித்த ராகுல் தனது அரைசதத்துடன் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இதனால் இந்திய அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சூர்யகுமார் 50 ரன்கள் (33 பந்துகள்), ராகுல் 51 ரன்கள் (56 பந்துகள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


Next Story