மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்த தவறிவிட்டதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வேதனை!


மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்த தவறிவிட்டதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் வேதனை!
x

image courtesy; twitter/ @BCCI

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

கவுகாத்தி,

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

அதன்படி இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்கள் குவித்து அசத்தியது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 123 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 223 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 104 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மேக்ஸ்வெல் ஆட்டத்தின் போக்கை மாற்றி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார்.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்;- 'நாங்கள் இந்த போட்டியில் எவ்வளவு விரைவாக மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த முடியுமோ அவ்வளவு விரைவாக வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். அதேபோன்று இந்த 220 ரன்களை வைத்து பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் இந்த மைதானத்தில் எதிரணியை கட்டுப்படுத்துவது சற்று கடினம்தான், இருந்தாலும் பந்துவீச்சாளர்களுக்கு தேவையான அளவு ரன்கள் இருந்ததாகவே நான் கருதுகிறேன்.

நான் எங்களது வீரர்களிடம் மேக்ஸ்வெல்லை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரை எங்களால் கடைசி வரை தடுத்து நிறுத்த முடியாமல் போனது. அதேபோன்று 19-வது ஓவரை அக்சர் படேலுக்கு கொடுக்க காரணம் அவரது அனுபவம்தான். பனிப்பொழிவு இருந்தாலும் அவரது அனுபவம் கை கொடுக்கும் என்று நினைத்தே அவரிடம் கொடுத்தேன். இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்து இருந்தாலும் எங்கள் அணியின் வீரர்களை நினைத்து பெருமை அடைகிறேன்'என்று கூறினார்.


Next Story