சறுக்கலில் இந்திய அணி... ஒரு பேட்ஸ்மேன் நின்றால் போதும் - சிராஜ் சொல்கிறார்


சறுக்கலில் இந்திய அணி... ஒரு பேட்ஸ்மேன் நின்றால் போதும் - சிராஜ் சொல்கிறார்
x

வங்காளதேச அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய இன்னும் 6 விக்கெட் தேவையாக உள்ளது.

மிர்பூர்,

வங்காளதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிக்குமே வெற்றி வாய்ப்பு சரிசமமாக தென்படுகிறது.

இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது. அடுத்து வரும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரைத் தான் இந்திய அணி மலைபோல் நம்பி இருக்கிறது.

வங்காளதேச அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ய இன்னும் 6 விக்கெட் தேவையாக உள்ளது. இந்திய அணி வெற்றிகரமாக இலக்கை விரட்டிப்பிடித்தால் அது இந்த மைதானத்தில் 3-வது அதிகபட்ச சேசிங்காக இருக்கும். இன்று 4-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நிருபர்களிடம் கூறுகையில், '4 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில் நாங்கள் இப்போது எதை பற்றியும் அதிகமாக யோசிக்கக்கூடாது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் வலுவாக நிலைத்து நின்று விட்டால் போதும். வெற்றி பெற்று விடலாம்.

கூடுதலாக 2 விக்கெட்டுகளை இழந்து விட்டோம் என்று நினைக்கிறேன். ஆனாலும் அக்ஷர் பட்டேல் நம்பிக்கையுடன், சரியான உத்வேத்துடன் விளையாடுகிறார். அவரை முன்வரிசையில் களம் இறக்கியது அணி நிர்வாகத்தின் முடிவு. அடுத்து ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யரும் இருக்கிறார்கள். எனவே தேவையில்லாமல் எதை பற்றியும் சிந்திக்கக்கூடாது' என்றார்.

73 ரன்கள் எடுத்த வங்காளதேச வீரர் லிட்டான் தாஸ் கூறுகையில், 'நாளைய தினம் (இன்று) காலையிலேயே ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அவர்கள் நெருக்கடிக்குள்ளாவார்கள். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும். அது தான் எங்களது இலக்கு. இந்திய அணியை வீழ்த்தினால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். மிர்புரில் 4-வது இன்னிங்சில்(இலக்கை நோக்கி ஆடும் இன்னிங்ஸ்) பேட்டிங் செய்வது எவ்வளவு கடினம் என்பது எங்களுக்கு தெரியும்' என்றார்.


Next Story