ஐ.பி.எல் 2024; சி.எஸ்.கே அணிக்கு வந்த சிக்கல்...நட்சத்திர வீரர் காயம் - தொடரில் பங்கேற்பாரா..?


ஐ.பி.எல் 2024; சி.எஸ்.கே அணிக்கு வந்த சிக்கல்...நட்சத்திர வீரர் காயம் - தொடரில் பங்கேற்பாரா..?
x

Image Courtesy: @ChennaiIPL

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் துவங்க உள்ளது.

இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சி.எஸ்.கே அணிக்கு தோனி தலைமை தாங்க இருக்கும் வேளையில் அவருக்கு இதுவே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. எனவே இம்முறையும் கோப்பையை வென்று அவரை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என வீரர்கள் தயாராக இருக்கின்றனர்.

இந்நிலையில் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வரும் ஷிவம் துபேவுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

அதோடு மட்டுமின்றி அவருக்கு தசைப் பிடிப்பும் ஏற்பட்டுள்ளதால் இந்த காயம் குணமடைய சில மாதங்கள் வரை ஆகும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சி.எஸ்.கே அணியிலிருந்து ஷிவம் துபே விலகினால் அவரது இடத்தை நிரப்ப வேண்டிய வீரரை அந்த அணி தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


Next Story