ஐ.பி.எல் 2024; ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர்


ஐ.பி.எல் 2024; ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் - சுனில் கவாஸ்கர்
x

Image Courtesy: twitter

குஜராத் அணியில் இருந்து பாண்ட்யா விலகியதால் சுப்மன் கில் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்த நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

வரும் ஐ.பி.எல் தொடருக்கான மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வாங்கப்பட்ட ஹர்த்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கடந்த இரு சீசன்களில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யா இரண்டு முறையும் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். அதில் ஒரு முறை கோப்பையையும் வென்று கொடுத்தார். இந்நிலையில் குஜராத் அணியில் இருந்து பாண்ட்யா விலகியதால் சுப்மன் கில் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியில் பாண்ட்யாவின் இடத்தை தமிழக வீரர் விஜய் சங்கர் நிரப்புவார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாண்ட்யாவின் தலைமையில் இரண்டு வருடங்களாக விளையாடிய விஜய் சங்கர் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுகொண்டிருப்பார். ஒவ்வொரு ஆட்டத்தின்போதும் கடினமான நேரங்களில் எப்படி பந்துவீச வேண்டும், எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதையும் பாண்டியாவிடம் இருந்து கற்றுக்கொண்டிருப்பார்.

விஜய் சங்கரால் பாண்ட்யா போல் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் அவர் ஹர்திக்கின் 80 அல்லது 90% தாக்கத்தை காட்டினால் கூட, அவர் ஒரு சிறந்த வீரராக கருதப்படுவார். நிச்சயம் விஜய் சங்கரால் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story