ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: துபாயில் இன்று நடக்கிறது


ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம்: துபாயில் இன்று நடக்கிறது
x

10 அணிகளையும் சேர்த்து மொத்தம் 30 வெளிநாட்டவர் உள்பட 77 இடங்களை நிரப்ப வேண்டி உள்ளது.

துபாய்,

10 அணிகள் இடையிலான 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் கடைசியில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரஸ்பர வர்த்தக அடிப்படையில் வீரர்கள் பரிமாற்றம் ஆகியவை ஏற்கனவே முடிந்து விட்டன.

வீரர்கள் பரிமாற்றத்தில் ஹர்திக் பாண்ட்யா குஜராத் அணியில் இருந்து மும்பைக்கும், கேமரூன் கிரீன் மும்பை அணியில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுக்கும் தாவியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதிகமான சர்வதேச போட்டி இருப்பதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் 2024-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் இருந்து விலகி விட்டனர்.

இந்த நிலையில் கழற்றி விடப்பட்ட வீரர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாக அரங்கில் இன்று நடக்கிறது. ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் வெளிநாட்டில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

10 அணிகளையும் சேர்த்து மொத்தம் 30 வெளிநாட்டவர் உள்பட 77 இடங்களை நிரப்ப வேண்டி உள்ளது. ஏலத்தில் செலவிட அதிகபட்ச கையிருப்புத் தொகையாக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.38 கோடியே 15 லட்சத்தை வைத்துள்ளது. அந்த அணிக்கு இன்னும் 8 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சிடம் ரூ.31.4 கோடி இருப்புத் தொகை உள்ளது. சென்னை அணியில் 6 இடங்கள் காலியாக உள்ளது.

ஏலப்பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 116 வீரர்கள் மட்டும் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர்கள்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், இங்கிலாந்தின் ஹாரி புரூக், தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஜீ, இந்திய பவுலர்கள் ஷர்துல் தாக்குர், ஹர்ஷல் பட்டேல், உமேஷ் யாதவ், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் உள்பட 23 வீரர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது இவர்களை ஏலத்தில் ரூ.2 கோடியில் இருந்து கேட்பார்கள். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் ஜாசன் ஹோல்டர், நியூசிலாந்தின் டிம் சவுதி, இங்கிலாந்தின் பில் சால்ட் உள்பட 13 வீரர்களின் தொடக்க விலை ரூ.1½ கோடியாகும்.

துல்லியமாக பந்துவீசக்கூடிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 8 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளார். அவருக்கு தான் அதிகமான கிராக்கி இருக்கும் என்பதே பெரும்பாலான கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர், ஹர்ஷல் பட்டேல், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா, நியூசிலாந்தின் டேரில் மிட்செல், ஆப்கானிஸ்தானின் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், தென்ஆப்பிரிக்காவின் கோட்ஜீ, தப்ரைஸ் ஷம்சி, இங்கிலாந்தின் அடில் ரஷித், ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ், கம்மின்ஸ் ஆகியோரும் கணிசமான தொகைக்கு விலை போகலாம்.

சமீபத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 3 சதம், 2 அரைசதம் உள்பட 578 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்த நியூசிலாந்து இளம் ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவுக்கு நிறைய அணிகள் குறி வைத்துள்ளன. அவரது தொடக்க விலை ரூ.50 லட்சமாக இருந்தாலும் ரூ.10 கோடிக்கு மேல் எகிறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை மூத்த வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெற்று விட்டார். பென் ஸ்டோக்ஸ் அடுத்த சீசனில் இருந்து ஒதுங்கியுள்ளார். அவர்களுக்கு பதிலாக சரியான வீரர்கள் அணிக்கு தேவையாகும். ஷர்துல் தாக்குர், மனிஷ் பாண்டே, ஹேசில்வுட், ரச்சின் ரவீந்திரா, ஜோஷ் இங்லிஸ் உள்ளிட்ட வீரர்களில் ஒரு சிலரை வாங்க சென்னை அணி ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.

ஏலப்பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஷாருக்கான், பிரதோஷ் பால், பாபா இந்திரஜித், அபராஜித், எம்.சித்தார்த் உள்பட 11 பேர் இடம் வகிக்கிறார்கள். இவர்களில் யார்-யார் ஐ.பி.எல். அணிகளில் இணையப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஏலம் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.


Next Story