ஐபிஎல்: காயமடைந்த ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த லக்னோ அணி நிர்வாகம்...!


ஐபிஎல்: காயமடைந்த ராகுலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த லக்னோ அணி நிர்வாகம்...!
x

லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் கடந்த 1-ந்தேதி நடந்த பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்தார்.

பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் பவுண்டரி நோக்கி அடித்த பந்தை வேகமாக ஓடி தடுக்க முற்பட்ட போது வலது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் கைத்தாங்கலாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

'ஸ்கேன்' பரிசோதனையில் தசைநார் கிழிந்திருப்பது தெரியவந்ததால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எஞ்சிய போட்டிகளில் இருந்து ஒதுங்கினார். ராகுலுக்கு பதிலாக அந்த அணியை ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா வழிநடத்துகிறார்.

அடுத்த மாதம் (ஜூன்) 7-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் லோகேஷ் ராகுல் இடம் பெற்றிருந்தார். இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் ராகுல் விலகினார்.

இந்நிலையில், லக்னோ அணியில் கே.எல்.ராகுலுக்கு மாற்று வீரராக இந்தியாவின் கருண் நாயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கருண் நாயர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story