பாண்ட்யா சகோதரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும் இஷான் கிஷன்


பாண்ட்யா சகோதரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளும் இஷான் கிஷன்
x

image courtesy;AFP

இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடி பார்முக்கு திரும்ப வேண்டும் என்று ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டிருந்தார்.

காந்திநகர்,

கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஒரு வருடமாக இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இஷான் கிஷன் குடும்பத்தை பார்க்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐ-யிடம் கேட்டார். அதில் நியாயமும் இருந்ததால் பிசிசிஐ உடனடியாக அந்த தொடரிலிருந்து விடுப்பு கொடுத்தது.

ஆனால் அந்த விடுப்பில் இஷான் கிஷன் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டார். அதன் காரணமாகவே இஷான் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்படவில்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

இருப்பினும் இதனை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுத்தார். மேலும் நன்னடத்தை காரணமாக இஷான் கிஷன் நீக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காகவே அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்திய அணியில் மீண்டும் இஷான் கிஷன் விளையாடுவதற்கு உள்ளூர் கிரிக்கெட்டில் சில போட்டிகளில் விளையாடி பார்முக்கு திரும்ப வேண்டும் என்றும் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டிருந்தார். அதனால் ராகுல் டிராவிட் பேச்சைக் கேட்டு இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக இஷான் கிஷன் ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பிப்ரவரி 9ஆம் தேதி அரியானாவுக்கு எதிராக ஜம்சேத்பூர் நகரில் துவங்கும் ரஞ்சி கோப்பை போட்டியில் தன்னுடைய மாநில அணியான ஜார்க்கண்ட் அணிக்கு விளையாட இஷான் கிஷன் எந்த விருப்பத்தையும் காட்டவில்லை.

இந்த நிலையில் இஷான் கிஷன், மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோருடன் இணைந்து குஜராத்தில் உள்ள கிரண் மோர் அகாடமியில் பயிற்சியை தொடங்கியது தெரிய வந்துள்ளது. சில வாரங்களாகவே பாண்ட்யா சகோதரர்களுடன் இணைந்து இஷான் கிஷன் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் ஐ.பி.எல். தொடர் வரை ஓய்வில் இருக்கலாம் என்றும், ஐ.பி.எல். தொடரில் நேரடியாக மும்பை அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு விளையாட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story