ஸ்ரேயாஸ், இஷான் இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல... ரோகித் , கோலி கூட... - கீர்த்தி ஆசாத்


ஸ்ரேயாஸ், இஷான் இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல... ரோகித் , கோலி கூட... -  கீர்த்தி ஆசாத்
x

இஷான், ஸ்ரேயாஸ் மட்டுமல்ல ரோகித், கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று கீர்த்தி ஆசாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் 2023- 2024 காலண்டர் வருடத்திற்கான மத்திய சம்பள ஒப்பந்தப் பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்தது. அதில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடவில்லை என்பதற்காக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய 2 வீரர்களை பி.சி.சி.ஐ. அதிரடியாக நீக்கியது. இந்த நடவடிக்கை இந்திய கிரிக்கெட்டில் கலவையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இஷான், ஸ்ரேயாஸ் மட்டுமல்லாமல் இந்தியாவுக்காக விளையாடாத நேரங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டுமென்று 1983 உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்த முன்னாள் இந்திய வீரர் கீர்த்தி ஆசாத் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் விதிமுறை என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு;-

"இது சரியான முடிவு. அனைவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும். இப்போது ஐ.பி.எல். மீது மட்டுமே ஆர்வம் இருக்கிறது. பொழுதுபோக்கிற்கு ஐ.பி.எல். நன்றாக இருக்கும். ஆனால் உண்மையான கிரிக்கெட் 5 நாட்கள் விளையாடுவதில்தான் உள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது உங்களுடைய பார்மை தக்க வைக்க உதவும். எனவே நீங்கள் ரோகித் சர்மா அல்லது விராட் கோலியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாநில அணிக்காக உள்ளூரில் விளையாட வேண்டும்

ஏனெனில் மாநிலம்தான் உங்களுக்கு ஒரு வீரராக வாய்ப்பு கொடுத்தது. அங்கிருந்துதான் நீங்கள் நாட்டுக்காக விளையாட வந்தீர்கள். அதனால் ஸ்ரேயாஸ், இஷான் ஆகிய இருவரை மட்டும் தண்டிப்பது சரியல்ல. அனைவரையும் தண்டிக்க வேண்டும். அனைவரையும் ஒரே கண்ணாடியில் பார்க்க வேண்டும். இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான டி20 லீக் நடைபெறுகிறது.

என்னுடைய கெரியரை துவங்கும்போது இந்திய அணியில் பிஷன் சிங் பேடி, மதன் லால், சுரீந்தர் அமர்நாத், மொஹிந்தர் அமர்நாத், சேட்டன் சவுகான், சந்தீப் பாட்டில், கசன் கர்வி மற்றும் ரவி சாஸ்திரி போன்ற இளம் வீரர்கள் இருந்தோம். அப்போதெல்லாம் நாங்கள் எங்களுடைய மாநில அணிக்காக மிகவும் பெருமையுடன் உள்ளூரில் விளையாடுவோம். அந்த பெருமையான உணர்வை தற்போதைய இளம் வீரர்களிடம் பார்க்க முடியவில்லை" என்று கூறினார்.


Next Story