இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் நியமனம்..?

image courtesy: AFP
இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. ஏற்கனவே அடுத்த பயிற்சியாளருக்கான தேடலில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அந்த ரேஸில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவுதம் கம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நியமனம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே கவுதம் கம்பீர் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணியின் கவுதம் கம்பீர் நியமன அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனக்கான பயிற்சியாளர் குழுவை கவுதம் கம்பீர் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்கள் குழுவை கவுதம் கம்பீர் தேர்வு செய்து வருகிறார்.
அதில் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விளையாடிய கால கட்டத்தில் பீல்டிங் துறையில் தனி முத்திரை பதித்தவர். மேலும் இன்றளவும் சிறப்பாக பீல்டிங் செய்த வீரர்களின் தேர்வில் டாப் இடத்தில் இருப்பவரும் இவரே. இன்றைய கால கட்டத்தில் வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்தாலும் இவரை எவராலும் ஈடு செய்ய முடியவில்லை.






