ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா


ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
x

Image Courtesy: @BCCI

இந்த தொடரில் நாளை மறுநாள் நடைபெற உள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

பெனோனி,

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் பெனோனியில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களாக லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்டோல்க் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஸ்டீவ் ஸ்டோல்க் 14 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய டேவிட் டீகர் டக் அவுட் ஆனார்.

இதையடுத்து லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் உடன் ரிச்சர்ட் செலட்ஸ்வேன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக அடி அணியை சரிவில் இருந்து மீட்டது. நிதானமாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 76 ரன்னிலும், ரிச்சர்ட் செலட்ஸ்வேன் 64 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ராஜ் லிம்பானி 3 விக்கெட்டும், முஷீர் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி 32 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து உதய் சஹாரன் - சச்சின் தாஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் அரைசதம் அடித்து அசத்தினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் தாஸ் 96 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து ஆரவெல்லி அவனிஷ் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் சச்சின் தாஸ் 96 ரன், உதய் சஹாரன் 81 ரன் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த தொடரில் நாளை மறுநாள் நடைபெற உள்ள 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியை இந்திய அணி வரும் 11-ம் தேதி இறுதிப்போட்டியில் சந்திக்கும்.


Next Story