குல்தீப் சுழலில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி: இந்தியாவுக்கு 100 ரன்கள் வெற்றி இலக்கு


குல்தீப் சுழலில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி: இந்தியாவுக்கு 100 ரன்கள் வெற்றி இலக்கு
x

தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.

டெல்லி,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனிடையே தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மலான் மற்றும் டி காக் களமிறங்கினர். இன்னிங்சின் 3-வது ஓவரில் வாசிங்டன் சுந்தர் பந்துவீச்சில் டி காக் 6 ரன்களில் அவேஷ் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் மலான் (15 ரன்கள்) , ஹென்ரிக்ஸ் (3 ரன்கள்) , மார்க்ரம் (9 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் க்ளாஸென் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருப்பினும் மற்றொரு முனையில் தென் ஆப்பிரிக்கா அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. குறிப்பாக குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்கள் இமாட், நோர்ட்ஜெ ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் நடையை கட்டினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.


Next Story