கடைசி போட்டி; டீன் எல்கரை கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்த விராட் கோலி..!


கடைசி  போட்டி;  டீன் எல்கரை கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்த  விராட் கோலி..!
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 3 Jan 2024 9:09 PM GMT (Updated: 3 Jan 2024 9:10 PM GMT)

இந்த ஆட்டத்துடன் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

கேப்டவுன்,

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் கட்டாயம் வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இந்திய அணி களம் இறங்கியது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் இந்தியாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 55 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 2வது இன்னிங்சை ஆடி வரும் தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. இந்த ஆட்டத்துடன் தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்த ஆட்டத்தின் போது எல்கர் முதல் இன்னிங்சில் 4 ரன்களிலும், 2வது இன்னிங்சில் 12 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 2வது இன்னிங்சில் எல்கர் கொடுத்த கேட்சை விராட் கோலி பிடித்தார். இதையடுத்து தன்னுடைய வாழ்வில் கிரிக்கெட் வீரராக கடைசி முறையாக மைதானத்திலிருந்து மிகுந்த உணர்ச்சிபூர்வமாக டீன் எல்கர் வெளியேறினார்.

இதையடுத்து விராட் கோலி உடனடியாக கேப்டவுன் மைதானத்தில் இருந்து ரசிகர்களை பார்த்து டீன் எல்கருக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டி தலை வணங்குங்கள் என்று வெளிப்படையாகவே செய்கை செய்து கேட்டுக் கொண்டார்.

அத்துடன் டீன் எல்கர் அருகில் சென்று கட்டியணைத்து சிறப்பாக விளையாடியதாக பாராட்டு தெரிவித்து வழி அனுப்பினார். மேலும் முகேஷ் குமார், கேப்டன் ரோகித் சர்மா போன்ற இந்திய வீரர்களும் டீன் எல்கருக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.


Next Story