பரபரப்பான போட்டியில் திருப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை..!


பரபரப்பான போட்டியில் திருப்பூரை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மதுரை..!
x
தினத்தந்தி 4 July 2023 5:28 PM GMT (Updated: 4 July 2023 5:33 PM GMT)

மதுரை அணி வெற்றிபெற்றதால், திருப்பூர் மற்றும் சேப்பாக் அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நாளையுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்து விட்டன. பிளே-ஆப் சுற்றில் கால்பதிக்கும் 4-வது அணி எது? என்பது இன்று தெரிந்து விடும். இந்த ஒரு இடத்திற்கு நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (6 புள்ளி), முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் (6 புள்ளி), திருப்பூர் தமிழன்ஸ் (4 புள்ளி) இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இன்றைய முக்கியமான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்கள் சுரேஷ் லோகேஸ்வர், ஹரி நிஷாந்த் இருவரும் அதிரடியாக விளையாடினர்.பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டு சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் ஹரி நிஷாந்த் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஆதித்யா அதிரடி காட்டினார்.

மறுபுறம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் லோகேஸ்வர் 44 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து 37 ரன்களில் வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் மதுரை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ரன்கள் இலக்குடன் திருப்பூர் அணி விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விஷ்னு வைத்யா 21 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா சிறப்பாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விவேக் 11 ரன்களும், விஜய் சங்கர் 28 ரன்களும் எடுத்தனர்.

ஆட்டத்தின் கடைசி ஓவரில் திருப்பூர் அணிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரு பந்துகளில் சிக்ஸ், பவுண்டரி என 10 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 4 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது.

எனினும், அடுத்த பந்துகளை குர்ஜப்னீத் சிங் துல்லியமாக வீசியதால், திருப்பூர் பேட்ஸ்மேன்களால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இறுதியில் திருப்பூர் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களே எடுக்கமுடிந்தது.

இதன் மூலம் பரபரப்பான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றிபெற்றது. அத்துடன், கடைசி அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.

ஒருவேளை திருப்பூர் அணி வெற்றிபெற்றால், ரன்ரேட் அடிப்படையில் சேப்பாக் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் நிலை இருந்தது. ஆனால், நடந்துமுடிந்த போட்டியில் மதுரை அணி வெற்றிபெற்றதால், திருப்பூர் மற்றும் சேப்பாக் அணிகளின் பிளே ஆப் வாய்ப்பு முடிவுக்கு வந்தது.


Next Story