விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸ்-க்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!


விராட் கோலியை விமர்சித்த முகமது ஹபீஸ்-க்கு பதிலடி கொடுத்த மைக்கேல் வாகன்!
x
தினத்தந்தி 7 Nov 2023 9:28 AM GMT (Updated: 7 Nov 2023 9:30 AM GMT)

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி சுயநல எண்ணத்துடன் விளையாடியதாக விமர்சித்தார்.

புது டெல்லி,

இந்திய வீரர் விராட் கோலி சொந்த மண்ணில் நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பைகிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 8 ஆட்டங்களில் விளையாடி 540 ரன்களை குவித்துள்ள அவர் இந்தியா பதிவு செய்துள்ள வெற்றிகளில் பேட்டிங் துறையில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சவாலான பிட்ச்சில் 101 ரன்கள் குவித்த அவர் உலகக்கோப்பை வரலாற்றில் தன்னுடைய பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் ஆல் டைம் சாதனையையும் சமன் செய்தார். மேலும் அந்த ஆட்டத்தில் நேரம் செல்ல பிட்ச் பேட்டிங் செய்வதற்கு கடினமான காரணத்தால் கடைசி நேரத்தில் அவர் சற்று மெதுவாக விளையாடி சத்தத்தை தொட்டார்.

ஆனால் அதை புரிந்து கொள்ளாத சிலர் சொந்த சாதனைக்காக சதமடிக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி மிகவும் சுயநலத்துடன் விளையாடியதாக விமர்சித்தனர். குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் கடந்த 3 போட்டிகளில் விராட் கோலி சுயநல எண்ணத்துடன் விளையாடியதாக விமர்சித்தார். மேலும் 49வது ஓவரில் அணியின் நலன் கருதி அதிரடியாக விளையாடாமல் சிங்கிள் எடுத்து விராட் கோலி சதத்தை தொட்டதாக விமர்சித்த அவர் ரோகித் சர்மா மட்டுமே தன்னலமின்றி அணியின் நலனுக்காக விளையாடியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் ஹபீசின் இந்த கருத்துக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளது பின்வருமாறு;-

"வாருங்கள் முகமது ஹபீஸ். இந்தியா மகத்தான கிரிக்கெட்டை விளையாடி 8 அணிகளை தோற்கடித்துள்ளது. விராட் கோலி தற்போது 49 சதங்கள் அடித்துள்ளார். அவரின் கடைசி சதம் கடினமான பிட்ச்சில் நங்கூரமாக விளையாட வேண்டிய நிலைமையில் வந்தது. அதில் அவருடைய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த கருத்து முற்றிலும் முட்டாள்தனமானது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story