குட்டி ரசிகைக்கு எம்.எஸ். தோனி கொடுத்த அன்பு பரிசு...வான்கடேவில் நெகிழ்ச்சி


குட்டி ரசிகைக்கு எம்.எஸ். தோனி கொடுத்த அன்பு பரிசு...வான்கடேவில் நெகிழ்ச்சி
x

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை - சென்னை அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின.

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

முன்னதாக இந்த போட்டியில் டேரில் மிட்செல் அவுட்டானதும் களமிறங்கிய சி.எஸ்.கே. அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி கடைசி 4 பந்துகளை மட்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அதில் 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்சர்களை பறக்க விட்ட அவர் 20 (4 பந்துகளில்) ரன்களை 500 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மாஸ் பினிஷிங் கொடுத்தார்.

அப்படி அதிரடியாக விளையாடி முடித்ததும் நேரடியாக பெவிலியன் நோக்கி வேகமாக சென்ற தோனி மாடி படிக்கட்டில் பந்து ஒன்று கிடப்பதை பார்த்தார். அதை கையில் எடுத்த தோனி அப்படியே அருகில் நீல நிற ஜெர்சியை அணிந்து நின்று கொண்டிருந்த ஒரு குட்டி மும்பை பெண் ரசிகரிடம் அந்த பந்தை கொடுத்து விட்டு சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.


Next Story