அம்மாவால் மட்டுமே இப்படி கூற முடியும்... வைரலாகும் அஸ்வினின் எக்ஸ் பதிவு


அம்மாவால் மட்டுமே இப்படி கூற முடியும்... வைரலாகும் அஸ்வினின் எக்ஸ் பதிவு
x

image courtesy: twitter/@ICC

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் சமீபத்தில் தனது 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்தது. உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அசத்தத் துவங்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

அந்த வகையில் இந்தியாவுக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய முதல் தமிழக வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அஸ்வின் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தனது 100-வது போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள், 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் என்று மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் அறிமுக மற்றும் 100-வது டெஸ்டில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் வீரர் என்ற அரிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் களமிறங்கிய அஸ்வின் 128 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்கைப்பற்றினார். அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியை போன்றே தனது 100-வது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி 128 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், "இத்தனை வருடங்கள் விளையாடியும் எந்த முன்னேற்றமும் இல்லை. என் அம்மாவால் மட்டுமே இப்படி கூற முடியும்" என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story