இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே எங்கள் இலக்கு: டெவான் கான்வே


இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதே எங்கள் இலக்கு: டெவான் கான்வே
x

மூத்த வீரர்களின் அனுபவம் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும் என டெவான் கான்வே கூறியுள்ளார்.

மும்பை,

நடப்பு உலகக்கோப்பையின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இதில் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்கொள்வது குறித்து நியூசிலாந்து அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே கூறியதாவது:

"இந்தியா ஒரு வலுவான அணி என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் நாங்கள் அந்த சவாலை எதிர்நோக்குகிறோம். அரையிறுதியில் போட்டியை நடத்தும் நாட்டிற்கு எதிராக விளையாடுவதில் அதிக உற்சாகத்துடன் இருக்கிறோம். அவர்கள் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றாலும், அந்த சவாலை எதிர்கொள்ள நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு செல்வதே எங்களுடைய ஒரே இலக்கு. 2019-க்கு பிறகு இது எங்களுக்கு கிடைத்த மற்றொரு சிறந்த சந்தர்ப்பம். எங்கள் அணியில் நிறைய அனுபவ வீரர்களை பெற்றிருப்பது எங்களுடைய அதிர்ஷ்டம். இதற்கு முன்பு இதுபோன்ற சூழ்நிலைகளில் இருந்த மூத்த வீரர்கள் எங்களை வழிநடத்துவார்கள். நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, அதைத் தொடர்ந்து செய்துவிட்டாலே போதும் இறுதிப்போட்டிக்கு தானாகவே சென்றுவிடுவோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார். .


Next Story