"டிஆர்எஸ்" எடுக்குமாறு இனி ரோகித் சர்மாவிடம் ரிஷப் பண்ட் கூற முடியாது - பிராட் ஹாக்


டிஆர்எஸ் எடுக்குமாறு இனி ரோகித் சர்மாவிடம் ரிஷப் பண்ட் கூற முடியாது - பிராட் ஹாக்
x

Image Courtesy : IPL 

'ரீவ்யூ' எஞ்சி இருந்தபோதும் ரிஷப் பண்ட் ரீவ்யூ கேட்காதது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.

மும்பை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி களமிறங்கியது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

மும்பையின் இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை தவற விட்டது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடிய டெல்லி வீரர் டிம் டேவிட் 11 பந்தில் 34 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அதேவேளை, டிம் டேவிட் களமிறங்கிய முதல் பந்தில் பேட்டில் பந்து உரசி கீப்பர் ரிஷப் பண்ட் கேட்ச் பிடித்தார். ஆனால், அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. பந்துவீச்சாளார் கேப்டன் ரிஷப் பண்ட் இடம் இதை ரீவ்யூ செய்யும்படி கேட்டார். ஆனால், கேப்டன் ரிஷப் பண்ட் ரீவ்யூ செய்யவில்லை. ரீவ்யூ செய்து இருந்தால் அவுட் முடிவு கிடைத்து போட்டியின் முடிவு மாறி இருக்கும்.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய முக்கியமான நிகழ்வுகாக அது கருதப்படுகிறது. 2 ரீவ்யூக்கள் எஞ்சி இருந்தபோதும் கேப்டன் ரிஷப் பண்ட் ரீவ்யூ கேட்காதது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்வு குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் பேசியுள்ளார். ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறுகையில், " டிம் டேவிட் கீப்பரிடம் அடித்த பின் நடுவர் அவுட் கொடுக்காததால், பண்ட் பெரிதும் பாதிக்கப்பட்டார். சரியான ரீவ்யூ எடுக்கும் பொறுப்பு ரிஷப் பண்ட்-யிடம் உள்ளது. டிஆர்எஸ் எடுக்காததால் டிம் டேவிட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேற்றி உள்ளார்.

இதனால் இந்திய அணிக்காக விளையாடும் போது இனி விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவிடம் சென்று "டிஆர்எஸ்" எடுக்குமாறு (3-வது நடுவரிடம் முறையிடுமாறு )ரிஷப் பண்ட் கூற முடியாது. " என அவர் தெரிவித்தார்.


Next Story