'20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலக வேண்டும்' - ஷேவாக் சொல்கிறார்


20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலக வேண்டும் - ஷேவாக் சொல்கிறார்
x

‘20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் அளித்த ஒரு பேட்டியில்,

' 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக புதிதாக ஒருவரை கொண்டு வர அணி நிர்வாகம் மனதில் நினைத்தால் 35 வயதான ரோகித் சர்மா அந்த பதவியில் இருந்து விலக வேண்டும். அப்படி செய்தால் இந்த வயதில் அவர் தனது பணிச்சுமையையும், மனச்சோர்வையும் நிர்வகிக்க நன்றாக இருக்கும். அத்துடன் 20 ஓவர் போட்டிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டால், ரோகித் சர்மா நல்ல ஓய்வு எடுத்து கொண்டு புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த உதவிகரமாக இருக்கும்.

மூன்று வடிவிலான இந்திய அணியையும் ஒருவரே வழிநடத்த வேண்டும் என்ற கொள்கையை இந்திய அணி நிர்வாகம் இன்னும் விரும்பினால் அதற்கு ரோகித் சர்மாவே சிறப்பானவர் என்று நான் நம்புகிறேன். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங்கில் முதல் 3 வரிசையில் ரோகித் சர்மா, இஷான் கிஷான், லோகேஷ் ராகுல் ஆடினால் நன்றாக இருக்கும்.

இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் உம்ரான் மாலிக் பந்து வீச்சு தான் என்னை அதிகம் கவர்ந்ததாகும். அவரது திறமைக்கு மூன்று வடிவிலான இந்திய அணியிலும் நீண்ட காலம் இடம் பெறுவார்' என்று தெரிவித்தார்.


Next Story