சாத் ஷகீல் இரட்டை சதம்; பாகிஸ்தான் 461 ரன்கள் குவிப்பு...!


சாத் ஷகீல் இரட்டை சதம்; பாகிஸ்தான் 461 ரன்கள் குவிப்பு...!
x

Image Courtesy: AFP

பாகிஸ்தான் அணி தரப்பில் சாத் ஷகீல் இரட்டை சதம் (208)அடித்தார்.

காலே,

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 95.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.தனஞ்ஜெயா 122 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 101 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதையடுத்து 6வது விக்கெட்டுக்கு சாத் ஷகீலும், ஆஹா சல்மானும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. சாத் ஷகீல் 69 ரன்களுடனும் , ஆஹா சல்மான் 61 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஆஹா சல்மான் 83 ரன்னில் அவுட் ஆனார். ஒரு முனையில் சாத் ஷகீல் நிலைத்து நின்ற ஆட மறுமுனையில் நவுமன் அலி 25 ரன், ஷாகீன் அப்ரிடி 9 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதற்கிடையில் சாத் ஷகீல் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 121.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 461 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் சாத் ஷகீல் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதையடுத்து 149 ரன்கள் பின்னிலையுடன் இலங்கை அணி தனது 2வது இன்னிங்சை ஆட உள்ளது.


Next Story