மகன் பற்றிய கேள்விக்கு சச்சின் டெண்டுல்கரின் பதில்


மகன் பற்றிய கேள்விக்கு சச்சின் டெண்டுல்கரின் பதில்
x

மும்பை அணியில் இருக்கும் அர்ஜூன் டெண்டுல்கருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

மும்பை,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். தொடர்ந்து 2-வது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த ஆண்டில் ஐ.பி.எல்.-ல் அர்ஜூனின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என்ற கேள்விக்கு தெண்டுல்கர் பதில் அளிக்கையில், 'இது வித்தியாசமான ஒரு கேள்வி. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிந்து விட்டது. அர்ஜூனுடன் என்னுடைய உரையாடல் எப்போதும் இப்படித் தான் இருக்கும். 'உன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை பாதை சவாலானது.

மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. உனக்கு கிரிக்கெட் மீது ஈடுபாடு இருந்ததால் கிரிக்கெட் விளையாட தொடங்கினாய். அந்த ஆர்வம் இருந்தால் வாய்ப்பு கிடைக்கும் வரை நீ தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அப்படி செய்தால் அதற்குரிய பலன் கிடைக்கும்' என்று அவரிடம் சொல்வேன். ஆடும் லெவனில் அவரை சேர்ப்பது அணி நிர்வாகத்தின் முடிவு. அணித்தேர்வில் நான் ஒரு போதும் தலையிடுவது கிடையாது' என்றார். மும்பை அணியின் ஆலோசகராக தெண்டுல்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story