கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் -  சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 10 Jan 2023 1:47 PM GMT (Updated: 10 Jan 2023 4:12 PM GMT)

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு 'சீல்' வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்ட பிறகும், கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் தாராளமாக கிடைக்கிறது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ''பிளாஸ்டிக் தடை உத்தரவை முழுமையாக ஏன் அமல்படுத்தவில்லை?'' என்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர். பின்னர், ''கொடைக்கானலில் பிளாஸ்டிக் பைகள், பிலாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் கடைக்களுக்கு சீல் வைக்க வேண்டும்.

இதற்காக கொடைக்கானலுக்கு செல்லும் அனைத்து வழிகளிலும் சோதனைச் சாவடிகளை அமைக்க வேண்டும். அவ்வழியாக வரும் அனைத்து வானங்களையும் சோதனை செய்ய வேண்டும்.

சோதனைக்கு அரசு பஸ் உள்ளிட்ட வாகனத்தை நிறுத்தாத டிரைவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அதிகாரிளை கொண்ட சிறப்பு அதிரடி படையை கலெக்டர் நிரந்தரமாக அமைக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை 24-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story