அவர் போன்ற மகத்தான வீரரை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்


அவர் போன்ற மகத்தான வீரரை எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
x

விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

தர்மசாலா,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று சொன்னதை இங்கிலாந்து செய்து காட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற இந்தியா அபார கம்பேக் கொடுத்தது. அதனால் 4 போட்டிகளின் முடிவிலேயே 3 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. மேலும் சொந்த மண்ணில் 2012-க்கு பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் சாதனையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மறுபுறம் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் விளையாடத் தவறிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரை இழந்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகினார். ஆனால் ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி இங்கிலாந்தை தோற்கடித்து விட்டனர்.

இந்நிலையில் விராட் கோலி இத்தொடரில் விளையாடாததற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என அந்த அணியின் ஜாம்பவான் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். அதே சமயம் விராட் கோலி போன்ற மகத்தான வீரரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"விராட் கோலி இந்த தொடரில் விளையாடாமல் சென்றதற்கு இங்கிலாந்து ரசிகர்கள் நன்றி தெரிவிப்பார்கள் என்று கணிக்கிறேன். ஏனெனில் அவர் அந்தளவுக்கு தரமானவர். ஆனால் எங்களுடைய கண்ணோட்டத்தில் நீங்கள் எப்போதும் சிறந்தவர்களுக்கு எதிராக உங்களுடைய திறமையை சோதிக்க விரும்புவீர்கள். அந்த வகையில் பல ஆண்டுகளாக அவருக்கு எதிராக பந்து வீசுவது எனக்கு கடினமாக இருந்தது. அப்படிப்பட்ட அவரை இத்தொடரில் எதிர்கொள்ள முடியாமல் போனது அவமானம்" என்று கூறினார்.


Next Story