உலகக்கோப்பை தொடருக்கு சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இவரை தேர்வு செய்யுங்கள் - வாசிம் ஜாபர்


உலகக்கோப்பை தொடருக்கு சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இவரை தேர்வு செய்யுங்கள் - வாசிம் ஜாபர்
x

Image Courtesy: AFP

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் உலகக்கோப்பை தொடருகான 15 பேர் கொண்ட அணியை நாளைக்குள் அறிவிக்க ஐசிசி கெடு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அல்லது நாளை பிசிசிஐ அறிவிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டதாகவும் அதில் ஆசிய கோப்பை தொடரில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணாவை தவிர மற்ற வீரர்கள் அப்படியே இடம் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக திலக் வர்மாவை தேர்வு செய்யுங்கள் என இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் பிரசித் கிருஷ்ணாவை வெளியேற்றுவேன். திலக் வர்மாவா அல்லது சூர்யகுமார் யாதவா என்பதில் கடும் போட்டி இருக்கும். திலக் வர்மா இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாவிட்டாலும் நான் அவரை தேர்வு செய்வேன்.

மேலும், திலக் வர்மா எப்படி பேட் செய்கிறார் மற்றும் எப்படி விளையாடுகிறார் என்பதைப் பார்க்கும்போது, அவர் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று நினைக்கிறேன்.

சூர்யகுமார் யாதவுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம் பிடிக்கும் அளவுக்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story