அஸ்வினுக்கு செங்கோல் வழங்கி கவுரவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்


அஸ்வினுக்கு செங்கோல் வழங்கி கவுரவித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
x

image courtesy: twitter/ @TNCACricket

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். அவருக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி 100-வது சர்வதேச டெஸ்டாக அமைந்தது. உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி தோனி தலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அசத்தத் துவங்கிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார். அந்த வகையில் இந்தியாவுக்காக 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய முதல் தமிழக வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்துள்ள அஸ்வின் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அஸ்வினுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின்போது அஸ்வினுக்கு செங்கோல் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கியும், தங்க நாணயங்கள் மூலம் 500 என வடிவமைக்கப்பட்ட நினைவு பரிசையும் வழங்கி கவுரவித்துள்ளனர்.

இவ்விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான அனில் கும்ப்ளே, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


Next Story