பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே 5-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது..!


பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே 5-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது..!
x

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையே 5-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.

லாகூர்,

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 64 ரன்னும், டேரில் மிட்செல் 33 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 88 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் இப்திகர் அகமதுவின் அதிரடியால் ஆட்டம் கடைசி ஓவர் வரை நகர்ந்தது.

இறுதிஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரை ஜேம்ஸ் நீஷம் வீசினார். அபாரமாக பந்து வீசிய ஜேம்ஸ் நீஷம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 159 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

இப்திகர் அகமது 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 60 ரன்கள் விளாசியும் பலன் இல்லை. கேப்டன் பாபர் அசாம் (1 ரன்), விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (6 ரன்) சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டும், ஆடம் மில்னே, ரச்சின் ரவிந்திரா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்ததுடன் தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி ராவல்பிண்டியில் நாளை இரவு 9.30 மணிக்கு நடக்கிறது.


Next Story