ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு: ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமம் மின்னணு முறையில் ஏலம் நாளை தொடங்குகிறது

கோப்புப்படம் ANI
ஐ.பி.எல். கிரிக்கெட் டி.வி. ஒளிபரப்பு உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் நாளை தொடங்குகிறது.
மும்பை,
சமீபத்தில் நிறைவடைந்த 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணி மகுடம் சூடியது. இறுதி ஆட்டத்தை மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். அத்துடன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமமும் முடிவுக்கு வந்தது. 2018-ல் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுக்கு ஸ்டார் ரூ.16,347 கோடிக்கு டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை பெற்றிருந்தது.
இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுக்கான (2023 முதல் 2027 வரை) ஐ.பி.எல். போட்டிக்குரிய டி.வி. ஒளிபரப்பு மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் முதல்முறையாக மின்னணு ஏலம் மூலம் வழங்கப்பட இருக்கிறது. இந்த உரிமத்தை வாங்குவதற்காக டிஸ்னி ஸ்டார், சோனி, ஜீ குழுமம், ரிலையன்சின் வியாகாம்18 உள்பட பத்து முன்னணி நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வணிக நிறுவனமான அமேசானும் ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்தை பெற ஆர்வம் காட்டி வந்தது. ஆனால் ஏற்கனவே இந்திய சந்தையில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள அமேசான், ஐ.பி.எல். போட்டிக்கு பெரிய அளவில் பணத்தை கொட்டுவது தேவையில்லாத ஒன்று என்று கருதுவதாக தெரிகிறது. இதையடுத்து கடைசி நேரத்தில் ஏலப் போட்டியில் இருந்து அமேசான் விலகியது. 'கூகுள்' நிறுவனம் ஏலத்துக்கான டெண்டர் விண்ணப்பத்தை வாங்கி சென்றதே தவிர அதை சமர்ப்பிக்கவில்லை என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி கூறியுள்ளார். அதனால் கூகுள் ஒதுங்கி இருப்பது தெளிவாகிறது.
இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமத்தை 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் டி.வி. ஒளிபரப்பு உரிமம், இந்திய துணை கண்டத்துக்கான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், இந்திய துணை கண்டத்துக்கு மட்டும் ஐ.பி.எல். தொடக்க ஆட்டம், இறுதி சுற்று, பிளே-ஆப் உள்ளிட்ட குறிப்பிட்ட 18 ஆட்டங்களுக்கான டிஜிட்டல் உரிமம் (மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இதுவும் உயர்த்தப்படும்), கடைசியாக உலக நாடுகளுக்கான டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் இவ்வாறு பிரிக்கப்பட்டு இவற்றுக்கு அடிப்படை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக இந்திய துணை கண்டத்துக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமம் பெற ஒரு ஐ.பி.எல். ஆட்டத்துக்கான கட்டணம் ரூ.49 கோடியாகும். தற்போது ஐ.பி.எல்.-ல் 10 அணிகள் பங்கேற்பதால் மொத்தம் 74 ஆட்டங்கள் நடக்கின்றன. இதன்படி பார்த்தால் அடுத்த 5 ஆண்டுக்கு இந்த பிரிவில் மட்டும் உரிமத்தை பெற குறைந்தது ரூ.18,130 கோடி கொடுக்க வேண்டி வரும்.
எல்லாவற்றையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.60 ஆயிரம் கோடி வரை டி.வி. ஒளிபரப்பு, டி.ஜிட்டல் உரிமம் மூலம் வருவாய் கிடைக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது. மும்பையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 11 மணியில் இருந்து மின்னணு ஏலம் தொடங்குகிறது.
இதற்கான டெண்டர் விண்ணப்பம் வாங்கி சமர்ப்பித்த தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பு வழங்குவார்கள். அதன்மூலம் அந்த நிறுவனங்கள் தொகையை குறிப்பிட்டு ஏலம் கேட்பார்கள். இரண்டு அல்லது 3 ரவுண்டுகள் ஏலம் கேட்க வாய்ப்பு வழங்கப்படும். யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களோ அவர்களுக்கு உரிமம் ஒதுக்கப்படும். ஆனால் அதிக தொகை கேட்டுக் கொண்டே போனால் ஏலம் மறுநாள் கூட நீடிக்கும்.






