ஐசிசி உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..!!


ஐசிசி உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..!!
x
தினத்தந்தி 25 Aug 2023 5:04 PM GMT (Updated: 25 Aug 2023 7:52 PM GMT)

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா அல்லாத மற்ற ஆட்டங்களுக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

புதுடெல்லி,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தவிர்த்து மற்ற அணிகள் மோதும் 36 லீக் ஆட்டங்கள் மற்றும் இந்தியா அல்லாத 8 பயிற்சி ஆட்டங்கள் ஆகியவற்றுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. www.bookmyshow.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஐ.சி.சி. அறிவித்து இருந்தது. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் ஆன்லைனில் முயற்சித்ததால் 30-40 நிமிடங்கள் அந்த இணையதளம் முடங்கிப்போனது. இதனால் டிக்கெட் வாங்க ஆர்வமுடன் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.

மோதும் அணிகள், நடக்கும் இடம் ஆகியவற்றை பொறுத்து டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து மோதும் ஆட்டத்துக்கான டிக்கெட்டின் குறைந்த பட்ச விலை ரூபாய் ஆயிரமாகும். இது தவிர ரூ.1,500, ரூ.2,000, ரூ.3,000, ரூ.6.000 ஆகிய விலைகளிலும் விற்கப்படுகிறது.

அதே சமயம் லக்னோ மைதானத்தில் நடக்கும் ஆட்டங்களுக்கான டிக்கெட் ரூ.499-ல் தொடங்கி ரூ.900, ரூ.1,100, ரூ.1,500 ஆகிய விலைகளில் விற்கப்படுகிறது. இங்கு ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா-இலங்கை, நெதர்லாந்து-இலங்கை, நெதர்லாந்து- ஆப்கானிஸ்தான் மோதும் ஆட்டங்கள் நடக்கின்றன. இன்னும் சில மைதானங்களில் ரூ.500, ரூ.600, ரூ.750 ஆகியவை குறைந்தபட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் நடக்கும் ஆட்டங்களுக்கு டிக்கெட் விலை ரூ.1,000-ல் இருந்து ஆரம்பமாகிறது.

இந்தியாவின் ஆட்டங்கள்

இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மற்றும் இரு பயிற்சி ஆட்டத்துக்கான ஆன்லைன் டிக்கெட் ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்ப வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் சென்னையில் நடக்கும் இந்தியா- ஆஸ்திரேலியா (அக்.8) இடையிலான ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் வருகிற 31-ந்தேதியும், ஆமதாபாத்தில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் லீக் (அக்.14) ஆட்டத்துக்கான டிக்கெட்கள் வருகிற 3-ந்தேதியும் விற்கப்படுகிறது. இந்திய அணிக்குரிய டிக்கெட்டுகள் வாங்க உள்நாட்டு ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் அது சீக்கிரம் விற்று தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் செப்.15-ந்தேதி கிடைக்கும்.



கிரிக்கெட் உலகக் கோப்பை பல்வேறு நாடுகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஈபிள் கோபுரம் பின்னணியில் உலகக் கோப்பையை நடிகை மீனா அறிமுகம் செய்து வைத்தார். இந்திய நடிகர்களிலேயே முதல் முறையாக தனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் மீனா பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


Next Story