டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வெளியேற்றியது கோவை


டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரையை வெளியேற்றியது கோவை
x
தினத்தந்தி 26 July 2022 6:18 PM GMT (Updated: 26 July 2022 11:02 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாத்தில் (டி.எல்.எஸ். முறை) கோவை அணி வெற்றி பெற்றது.

சேலம்,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த நெல்லை ராயல் கிங்ஸ், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

இந்த நிலையில் இன்று வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஆதித்யா மற்றும் அருண் கார்த்திக் களமிறங்கினர்.

பாலு சூர்யா பந்துவீச்சில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆதித்யா ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த அனிருத் 7 ரன்களிலும் சதுர்வேத் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் அருண் கார்த்திக் நிலைத்து நின்று விளையாடினார். அவர் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. கோவை அணி தரப்பில் அஜித் ராம், அபிஷேக் தன்வார் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணியின் சார்பில் கங்கா ஸ்ரீதர் ராஜூ மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த சூழலில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது ஸ்ரீதர் ராஜூ 49 (40) ரன்களும், சுரேஷ் குமார் 20 (21) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கோவை அணி 9.5 ஒவரில் 72 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் டி.எல்.எஸ் முறையில் கோவை அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதனால் முன்னாள் சாம்பியனான மதுரை பாந்தர்ஸ் பரிதாபமாக வெளியேறியது.

வெற்றி பெற்ற கோவை அணி இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் அல்லது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆகிய அணிகளில் ஒன்றுடன் வருகிற 29-ந் தேதி மோதும்.


Next Story