டி.என்.பி.எல் : சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி நெல்லை அணி திரில் வெற்றி


டி.என்.பி.எல் : சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி நெல்லை அணி திரில் வெற்றி
x

Image Courtesy : Twitter @StarSportsTamil 

தினத்தந்தி 23 Jun 2022 5:49 PM GMT (Updated: 23 Jun 2022 5:54 PM GMT)

நெல்லை அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

நெல்லை,

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை நெல்லை, சேலம், கோவை, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது. முதல் நாளான இன்று நெல்லை சங்கர் நகரில் அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீசும், பாபா இந்திரஜித் தலைமையிலான நெல்லை ராயல் கிங்சும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நெல்லை ராயல் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக சூர்யபிரகாஷ் - பிரதோஷ் பால் களமிறங்கினர். சந்தீப் வாரியர் பந்துவீச்சில் பிரதோஷ் பால் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து பாபா இந்திரஜித் 3 ரன்களிலும் பாபா அபராஜித் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யபிரகாஷ் - சஞ்சய் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

சூர்யபிரகாஷ் 50 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சய் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு`184 ரன்கள் குவித்தது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக கவுசிக் காந்தி - ஜெகதீசன் களமிறங்கினர். 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ராதாகிருஷ்ணன் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் கவுசிக் காந்தி சிறப்பாக ஆடி வந்தார். சோனு யாதவ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கவுசிக் காந்தி 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட கேப்டன் கவுசிக் 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவரில் சேப்பாக் அணி வெற்றி பெற 15 ரன்கள் தேவைப்பட 14 ரன்கள் அடிக்கப்பட போட்டி டிராவானது. இதனால் போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு சென்றது. முதலில் சேப்பாக் அணி பேட்டிங் செய்தது. 6 பந்துகள் முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்தது. 10 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி 1 விக்கெட்களை இழந்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.


Next Story