'லக்னோ அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன்' - மார்க் வுட்


லக்னோ அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன் - மார்க் வுட்
x

ஐ.பி.எல். வீரர்களில் மிகச்சிறந்தவர் என்று நிரூபிக்க விரும்புவதாக மார்க் வுட் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

இங்கிலாந்தின் அதிவேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ரூ.7½ கோடிக்கு ஒப்பந்தமாகி விளையாடி வருகிறார். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளிய மார்க்வுட், சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான மோதலில் 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்த நிலையில் ஐ.பி.எல்.-ல் தனது இலக்கு என்ன என்பது குறித்து நேற்று பேட்டி அளித்த 33 வயதான மார்க்வுட் கூறுகையில், 'இங்கிலாந்து அணிக்காக 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளேன். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சோபித்ததில்லை. 2018-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ஆடிய ஒரே ஒரு ஆட்டத்திலும் (சென்னை அணிக்காக) எனது பந்து வீச்சு அடித்து (4 ஓவரில் 49 ரன்) நொறுக்கப்பட்டது.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த சமயத்தில் போதிய அளவுக்கு நான் தயாராகவில்லை. இந்த தடவை ஐ.பி.எல்.-ல் எனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிக்கிறேன். ஐ.பி.எல். வீரர்களில் மிகச்சிறந்தவர் என்று நிரூபிக்க விரும்புகிறேன். அத்துடன் என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஏலத்தில் எடுத்த லக்னோவுக்கு பிரதிபலனாக மிகச்சிறந்த பங்களிப்பை வழங்க முயற்சிக்கிறேன்' என்றார்.


Next Story