'ஒரு பெரிய அணியை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது'- ஸ்காட் எட்வர்ட்ஸ்


ஒரு பெரிய அணியை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வெற்றி எங்களுக்கு கிடைத்துள்ளது- ஸ்காட் எட்வர்ட்ஸ்
x

image courtesy; twitter/ @ICC

தினத்தந்தி 18 Oct 2023 2:00 AM GMT (Updated: 18 Oct 2023 2:00 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

தர்மசாலா,

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.

இதனை தொடர்ந்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது. தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பவுமா 16 ரன், டிகாக் 20 ரன், அடுத்து களம் இறங்கிய வென் டர் டெசன் 4 ரன், மார்க்ரம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து 44 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.இதையடுத்து மில்லர் மற்றும் க்ளாசென் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. நிதானமாக ஆடிய க்ளாசென் 28 ரன்னில் அவுட் ஆனார். சிறிது நேரத்தில் மில்லரும் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால், தென் ஆப்பிரிக்காவின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வான் பீக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நெதர்லாந்து அணி, பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்து தங்களது வெற்றி குறித்து பேசிய நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறுகையில் : 'உண்மையிலேயே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்த தொடருக்கு வரும் முன்னர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புடன் வந்தோம். அந்த வகையில் நாங்கள் இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தியதில் மகிழ்ச்சி. எங்களது அணியிலும் நல்ல வீரர்கள் இருக்கின்றனர்.

இந்த தொடரில் முதல் வெற்றியை பெற்றதில் மிகவும் திருப்தியாக நினைக்கிறோம். இன்னும் சில வெற்றிகள் இந்த தொடரில் எங்களுக்கு கிடைக்கும் என்றும் நினைக்கிறோம். ஒரு சில நாட்கள் நாம் நினைத்தது நடக்கும், ஒரு சில நாட்கள் நடக்காமல் போகலாம். அந்த வகையில் நாங்கள் ஒரு பெரிய அணியை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோம். அந்த வெற்றி இந்த ஆட்டத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது இதனை அப்படியே கொண்டு செல்வோம்' என கூறியுள்ளார்.



Next Story