இறுதிப்போட்டியில் தோல்விக்கு காரணம் என்ன ? - வெளிப்படையாக பேசிய ஹர்திக் பாண்டியா


இறுதிப்போட்டியில் தோல்விக்கு காரணம் என்ன  ? - வெளிப்படையாக பேசிய ஹர்திக் பாண்டியா
x

Image Tweet by Hardik Pandya 

தினத்தந்தி 30 May 2023 3:07 AM GMT (Updated: 30 May 2023 3:17 AM GMT)

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

அகமதாபாத் ,

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியில் . 'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது.

குஜராத் அணியில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 96 ரன்களும் (47 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) , சஹா 54 ரன்களும் (39 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) , சுப்மன் கில் 39 ரன்களும் (20 பந்து, 7 பவுண்டரி) எடுத்தனர்.

பின்னர் 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி சென்னை அணி பேட்டிங் செய்தது. 0.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

இதை நோக்கி ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டும் (26 ரன்), கான்வேவும் (47 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்) அதிரடியான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த ரஹானே (27 ரன்), மாற்று வீரர் அம்பத்தி ராயுடு (19 ரன்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியது.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட ெடன்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார். முதல் 4 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்ததால் நெருக்கடி அதிகரித்தது. கடைசி 2 பந்தில் 10 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார்.

சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்ததோடு கோப்பையை உச்சிமுகர்ந்தது.

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது ,

"நான் சாக்குப்போக்கு கூறும் நபர்களில் ஒருவரல்ல. சென்னை அணி எங்களை விட சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது. நாங்கள் பேட்டிங் செய்த விதம் நிச்சயமாக ஆச்சரியமாக இருந்தது. சாய் சுதர்சன் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது .. நான் அவரை நன்றாக வாழ்த்துகிறேன், அவர் வாழ்க்கையில் அதிசயங்களைச் செய்யப் போகிறார்.

எங்கள் வீரர்கள் சீசன் முழுவதும் விளையாடிய விதம் உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.தொடர்ந்து போராடினார்கள். பயிற்சி ஊழியர்களுக்கும் ஒரு சிறப்பு குறிப்பு. அவர்கள் அருமையாக இருந்துள்ளனர்.

நல்லவர்களுக்கு நல்லது நடக்கும் என்று கடந்த ஆண்டு சொன்னேன். நான் சந்தித்த நல்ல மனிதர்களில் தோனியும் ஒருவர். தோனிக்காக மகிழ்ச்சி. என தெரிவித்தார்


Next Story